திருவையாறு பதிகம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்து ஏந்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
போழிளங் கண்ணியின் ஆனைப்
பூந்துகி லாளோடும் பாடி
வாழியம் போற்றிஎன்ற ஏத்தி
வட்டமிட்டு ஆடா வருவேன்
ஆழிவலவன் நின்று ஏத்தும்
ஐயாறு அடைகின்ற போது
கோழி பெடையோடுங் கூடி
குளிர்ந்து வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
எரிப்பிறைக் கண்ணியின் ஆனை
ஏந்துஇழை யாளோடும் பாடி
முரித்த இலயங்கள் இட்டு
முகம் மலர்ந்துஆடா வருவேன்
அரித்து ஓழுகும் வெள்ளருவி
ஐயாறு அடைகின்ற போது
வரிக்குயில் பேடையோடு ஆடி
வைகி வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருபாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
பிறைஇளம் கண்ணியின் ஆனை
பெய்வளை யாளோடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித்
தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயில் ஆலும்
ஐயாறு அடைகின்ற போது
சிறைஇளம் பேடையோடு ஆடி
சேவல் வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
ஏடுமதி கண்ணியின் ஆனை
ஏந்திழை யாளொடும்பாடிக்
காடொடு நாடு மலையுங்
கைதொழுது ஆடா வருவேன்
ஆடல் அமர்ந்து உறைகின்ற
ஐயாறு அடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப்
பிணைந்து வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
தண்மதிக் கண்ணியின் ஆனை
தையல் நல்லாளோடும் பாடி
உண்மெலி சிந்தையன் ஆகி
உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற
ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலோடு ஆடி
வைகி வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
கடிமதிக் கண்ணியின் ஆனை
காரிகை யாளோடும் பாடி
வடிவோடு வண்ணம் இரண்டும்
வாய்வேண்டுவன சொல்லி வாழ்வேன்
அடியினை ஆர்க்கும் கழலான்
ஐயாறு அடைகின்ற போது
இடிகுரல் அன்னதோர் ஏனம்
இசைந்து வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
விரும்பு மதிக்கண்ணி யானை
மெல்லிய லாளேடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து
பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும்
ஐயாறு அடைகின்ற போது
கருங்கலைப் பேடையோடு ஆடிக்
கலந்து வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
முற்பிறை கண்ணியின் ஆனை
மொய் குழலாளோடும் பாடி
பற்றிக் கயிறு அறுக்கிலேன்
பாடியும் ஆடா வருவேன்
அற்றுஅருள் பெற்று நின்றாரோ
ஐயாறு அடைகின்ற போது
நற்றுணை பேடையையோடு ஆடி
நாரை வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
திங்கள்மதி கண்ணியின் ஆனை
தேமொழி யாளோடும் பாடி
எங்கருள் நல்குங்கொல் எந்தை
எனக்கினி என்னா வருவேன்
அங்குஇளம் மங்கையர் ஆடும்
ஐயாறு அடைகின்ற போது
பைங்கிளிப் பேடையோடு ஆடிப்
பறந்து வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
வளர்மதிக் கண்ணியின் ஆனை
வார்குழ லாளோடும் பாடிக்
களவு படாததோர் காலங்
காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்
அளவு படாதுஓர் அன்போடு
ஐயாறு அடைகின்ற போது
இளமண நாடு தழுவி
ஏறு வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
No comments:
Post a Comment